Thirukural

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தால் செயின்

(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை. ('திண்ணியராய் நின்று செய்துமுடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின், அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல் வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை. இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - அரசர் பகையிடத்திற் செய்யும் வினைத்திறங்களை யெல்லாம் குறைவற எண்ணி அவற்றை இடத்தொடு பொருந்தச் செய்வாராயின் ; அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - வெல்வதற்குந் திடாரிக்கம் ஒன்றிருந்தாற்போதும் , வேறுதுணை வேண்டியதில்லை . மனத்திண்மையில்லாவிடத்து , இடமும் பிறவும் வாய்த்தும் பயனின்மையின் , அஞ்சாமையை இன்றியமையாத பெருந்துணையாகக் கூறினார் .
கலைஞர் உரை:
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.
சாலமன் பாப்பையா உரை:
செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அச்சமற்ற வீரனுக்கும் தக்க இடம் வேண்டும்.) அஞ்சாமை இருந்தால் போதும், வேறு துணை வேண்டியதில்லை என்பவர் களுக்கும் சரியான பாதுகாப்புள்ள இடம் அமைந்தால் அந்த அஞ்சாமை குறையாமல் இருக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பகைவரிடத்தில் தொழில் செய்யும் திறங் களில் குறையாமல் எல்லாவற்றையும் எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வாராயின், அச் செயலுக்குத் தமது மனத்தின திண்மையல்லாமல் வேறு துணை வேண்டுவதில்லை.
தமிழ்க்குழவி உரை:
நன்கு திட்டமிட்டு உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து செயல்பட முற்படும் போது அஞ்சாமையைத் தவிர்த்து வேறு துணை வேண்டியதில்லை.
Translation
Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision made.
Explanation
You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.
Transliteration
Anjaamai Allaal Thunaiventaa Enjaamai Enni Itaththaal Seyin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 497