|
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - முறைப்படி இல்லறவாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்; முயல்வாருள் எல்லாம் தலை - பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம்.
முற்றத்துறந்தார் யாரென மக்களால் அறியப் படாமையின், 'முயல்வாருளெல்லாம்' என்றும், இருவகை யறத்தார்க்கும் உதவியே வீடு பெறுதலின் 'தலை' என்றுங் கூறினார். என்பான் என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப்பொருளது.
|
|
கலைஞர் உரை:
|
|
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஏனென்றால், சரியான முறையில் இல்வாழ்க்கை நடத்துகிற குடும்பி, மேலான வாழ்வு பெறத் தவநெறியில் முயற்சி செய்கிறவர்கள் எல்லாரிலும் சிறந்தவன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இல்லறத்திற்குரிய இயல்புகளுடனே இல்வாழ்க்கை நடத்துபவன், ஆசைகளை அடக்கிவாழும் துறவிகள் எல்லோரினும் மேலானவன்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறநெறியில் நின்று இயல்பான இல்லறம் மேற் கொள்பவரே வாழ்வில் உயர்நிலையடைய முனைந் திடுவோருள் தலையாயவராகக் கருதப்படுவார்.
|
|
Translation
|
|
In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place
|
|
Explanation
|
|
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.
|
|
Transliteration
|
|
Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan
Muyalvaarul Ellaam Thalai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|