|
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம்(தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும். ('மன், உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூறப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும் , புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார்.மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு , அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என , அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்.
இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் -மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்; இனநலம் எல்லாப் புகழும் தரும் - இன நன்மை எல்லா வகையிலும் புகழை உண்டாக்கும்.
மன் என்னும் சொல் மன்பதை என்பதிற்போல் மாந்தனைக் குறித்தது. இச்சொல்லின் வரலாறு முன்னரே கூறப்பட்டது. "மனத்துக்கண் மாசிலனாத லனைத்தறன்" (குறள். 34) என்றும், "அறத்தினூஉங் காக்கமுமில்லை" (குறள். 22) என்றும் முன்னரே கூறியிருத்தலால், "மனநலமன்னுயிர்க் காக்கம்" என்றும், இனநலமுடையார்க்குப் புகழ்க்கேதுவான செயலெல்லாம் வெற்றியாய் முடிதலின் ' எல்லாப் புகழுந்தரும்' என்றும் ; கூறினார். இதனாலும் இருவகைத் தூய்மையின் பயன்களும் கூறப்பட்டன.
|
|
கலைஞர் உரை:
|
|
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோ
எல்லாப் புகழையும் வழங்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மனம் கெடாமல் நல்லதாகவே இருப்பது ஒருவனுடைய ஆன்மாவுக்குப் பலம் தரும். ஆனால் மனம் நல்லதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சேர்ந்திருக்கும் இனம் நல்லதாக இருந்தால் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாச் சிறப்புக்களும் உண்டாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நிலைபெற்ற மக்களுயிர்க்கு மனம் நன்றாக இருப்பது செல்வத்தினைத் தரும். இனமானது நன்றாக இருப்பதானது எல்லாப் புகழினையும் கொடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் மன நலம் நன்குடையவர் ஆக இருப்பின் எல்லா சிறப்புகளும் இனிதே அமையும். அதனோடு இனநலனும் வாய்க்கப்பெறின் எல்லா வகையிலும் புகழ்பெறுவர்.
|
|
Translation
|
|
Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain.
|
|
Explanation
|
|
Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.
|
|
Transliteration
|
|
Mananalam Mannuyirk Kaakkam Inanalam
Ellaap Pukazhum Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|