|
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை, எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்ற வைக்குவை போல அழிந்து விடும். ('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி, 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம் எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும்.
இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் நேர்வதற்கு முன்பே அதையறிந்து தடுக்காத அரசனது வாழ்க்கை; எரி முன்னர் வைத்தூறுபோலக் கெடும் -அது நேர்ந்தவுடன் நெருப்பு முகத்து நின்ற வைக்கோற்போர்போல அழிந்து விடும்.
குற்றம்என்பது அதிகாரத்தால் வந்தது. முன் - முன்னம் -முன்னர். குற்றத்தை அது வருமுன் காக்கவேண்டு மென்பதும் குற்றஞ் சிறிதாயினும் அதனாற் பேரிழப்பு விரைந்து நேருமென்பதும், உவமையாற் பெறப்பட்டன.
|
|
கலைஞர் உரை:
|
|
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத்
தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால்
உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(குற்றம் செய்தபின் வருந்திப் பயனில்லை. செய்து விடாமல் எச்சரிக்கையாகத் தடுக்க வேண்டும்.) குற்றம் செய்வதற்கு முன் எச்சரிக்கையாக இருந்து விலக்கி விடாதவனுடைய வாழ்க்கை நெருப்புத் தீண்டுவதற்குமுன் தடுப்பாரில்லாத வைக்கோல் பொதிபோல் அழிந்தே போகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
குற்றம் வருவதற்கு முன்பாகவே தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை அக்குற்றம் வந்தால் நெருப்பின் முன்னே இருக்கும் வைக்கோலினைப் போல அழிந்துவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தவறு ஒன்று நேர்வதற்கு முன்னே தற்காத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் நெருப்பின்முன் வைத்த வைக்கோல் போர் போல வாழ்க்கை அழிந்து போகும்.
|
|
Translation
|
|
His joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.
|
|
Explanation
|
|
The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.
|
|
Transliteration
|
|
Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar
Vaiththooru Polak Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|