Thirukural

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து.

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து. (மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லா தார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து. பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.
தேவநேயப் பாவாணர் உரை:
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் செல்வம்; பெருமித நீர்த்து - மேம்பாட்டுத் தன்மையை யுடைத்து. செருக்கினாற் காவற்கடமை தவறுதலும் பெரியாரைப் பிழைத்தலும், சினத்தினால் ஐம்பெருங்குழுவும் உறுதிச்சுற்றமும் போன்றவற்றின் அன்பை இழத்தலும், சிறுமையினால் பழியும் உயிர்ச்சேதமும், நேருமாதலின், அக்குற்றங்களில்லாத அரசரின் செல்வம் வீறுபெற்றுதென்றார். சிறியோர் இயல்பு என்னுங் கருத்தால் அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது.
கலைஞர் உரை:
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அகங்காரமும் கோபமும் அற்பத்தனமும் இல்லாதவர் களுடைய செல்வந்தான் பெருமை கொள்ளத்தக்கது,
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
செருக்கும் (மதமும்), கோபமும், காமமும், ஆகிய குற்றங்கள் இல்லாதவருடைய செல்வம் மேம்பாடான தன்மையினை உடையதாகும்.
தமிழ்க்குழவி உரை:
தற்பெருமை, கோபம், சிறுமைப் பண்பு இவை இல்லாத தன்மையர் உலகில் பாராட்டுக்குரியவராய் வாழ்வர்.
Translation
Who arrogance, and wrath, and littleness of low desire restrain, To sure increase of lofty dignity attain.
Explanation
Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.
Transliteration
Serukkunj Chinamum Sirumaiyum Illaar Perukkam Perumidha Neerththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 431