|
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம். (பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின் ,ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனைஉடையாரது இலக்கணம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மையாதல்; அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில்.
மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமையாம்; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் -அஞ்சவேண்டுவதற்கு அஞ்சுவது அறிவுடை யார் செயலாம்.
அறங்கடையும் (பாவமும்) பழியும் அழிவும் அஞ்சப்படுவன. அவற்றை 'அஞ்சுவது' என்றது வகுப்பொருமை. அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாமைபோன்றே, அஞ்சவேண்டாதற்கு அஞ்சுவதும் பேதைமையாம். இருட்டிடமும் நாட்டுப்போரும் அவைப்பேச்சும் அஞ்சவேண்டாதன, 'அஞ்சாமை' பொருட்படுத்தாது செய்து துன்புறுதல் அல்லது கெடுதல். 'அஞ்சல்' பொருட்படுத்தித் தவிர்ந்து இன்புறுதல். அஞ்சுவதஞ்சல் அறிஞர் இயல் பென்றற்கு 'அறிவார் தொழில்' என்றார்.
முன்பு அஞ்சாமை இறைமாட்சியாகச் சொல்லப் பட்டமையால் (382). அதற்கு மாறான அஞ்சுவதும் அரசனுக்குண்டென்று இங்குக் கூறியவாறு.
|
|
கலைஞர் உரை:
|
|
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.
அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆலோசிக்கவேண்டியதை ஆலோசிப்பதுடன் அஞ்ச வேண்டியதற்கும் அஞ்ச வேண்டும்.) அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் எதிர்ப்பது (தைரியமல்ல) முட்டாள்தனம்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது (கோழைத்தனமல்ல) அறிவுடைமை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் அறியாமையாகும். அஞ்சவேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடையோர்களது தொழிலாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அஞ்ச வேண்டிய தீவினைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறியாமை. அஞ்சவேண்டியவற்றிற்கு அஞ்சி நடத்தல் அறிவுடைமை.
|
|
Translation
|
|
Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.
|
|
Explanation
|
|
Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.
|
|
Transliteration
|
|
Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu
Anjal Arivaar Thozhil
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|