Thirukural

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
தேவநேயப் பாவாணர் உரை:
உலகம் எவ்வது உறைவது - உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வது உலகத்தோடு உறைவது அறிவு - அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம். உயர்ந்தோரைப் பின்பற்றுவது பொதுமக்கட்கு ஒழுக்கவுயர்வாம்; அரசர்க்கு அதனொடு புகழும் பதவிப்பாதுகாப்புமாம்.
கலைஞர் உரை:
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அப்போதைக்கு உலகப் போக்கு எப்படி யிருக்கிறதோ அதை அனுசரித்துப் பொது மக்களுடன் ஒட்டி நடந்துகொள்வது அறிவுடைமை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உலகமானது எந்த முறையில் நடந்து வருகின்றதோ அவ்வுலகத்துடன் பொருந்தித் தானும் அந்த முறையில் நடந்து கொள்ளுவது அறிவுடைமையாகும்.
தமிழ்க்குழவி உரை:
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு, அவர் தம்நடைமுறைகளைத் தேர்ந்து அதற்கேற்றபடி பொருந்தி வாழ்வது அறிவு நிலை.
Translation
As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and well.
Explanation
To live as the world lives, is wisdom.
Transliteration
Evva Thuraivadhu Ulakam Ulakaththotu Avva Thuraiva Tharivu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 426