Thirukural

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர். (செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.
தேவநேயப் பாவாணர் உரை:
செவிஉணவின் கேள்வி உடையார் -செவியுணவாகிய கேள்வியறிவினையுடையார்; நிலத்து அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர்-நிலவுலகில் வாழ்வாராயினும் அவியுணவினையுடைய விண்ணுலகத்தேவரை யொப்பர். செவியுணவின் கேள்வி என்பதிலுள்ள இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. தேவர் அறிவுடையர் என்னுங் கருத்தால் ஆன்றோர் என்னப் பெற்றார். கேள்வியறிவினையுடையார் துன்பமின்றியின்பமே நுகர்தலால் தேவருக்கொப்பாகக் கூறப்பட்டார்.
கலைஞர் உரை:
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.
சாலமன் பாப்பையா உரை:
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கேள்வியில் ஈடுபட்டிருப்பவர்கள் பசியை மறப்பார்கள் என்பது மட்டுமல்ல; மிகவும் ஆசை மூட்டக்கூடிய ருசியுள்ள தின்பண்டங் களையும்கூட அப்போது மதிக்கமாட்டார்கள்) செவி யுணவாகிய கேள்வி இன்பத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் உலகிலுள்ள மனிதர்களேயானாலும் படைப்பில் பரப்பப்பட்ட உயர்ந்த உண்டி களைத் தின்றுவிடாமலிருக்கிற தேவதைகளைப்போலத் தமக்கு முன்னால் மிக இனிய உணவுப் பண்டங்கள் இருந்தாலும் பொருட் படுத்த மாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
செவி உணவாகிய கேள்வியினையுடையவர்கள், பூமியில் வாழ்பவர்களாக இருந்தாலும் அவி உணவினையுடைய தேவர்களோடு ஒப்பாவார்கள்.
தமிழ்க்குழவி உரை:
வேள்வியின் அவி உணவைப் பெறுகின்ற வானுலக தேவர்களுக்கே ஒப்பானவர்கள் கேள்விஞானம் பெறுவதற்காக செவியுணவு கொள்பவர்கள்.
Translation
Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share.
Explanation
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.
Transliteration
Seviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin Aandraaro Toppar Nilaththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 413