|
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். (பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும்.
இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறவிநிலைமைக்கு அஞ்சி அதனின்று விடுதலை பெறும் பொருட்டு உலகப்பற்றைத் துறந்தவருளெல்லாம் ; கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை- கொலைவினைக் கஞ்சிக் கொல்லா வறத்தைக் கடைப்பிடிப்பவன் தலையாவான்.
பிறவி நிலைமையாவது எல்லாவுயிர்களும் இருதிணைப் பிறப்பிலும் எல்லையில்லாது பிறந்திறந்து பிறப்புப்பிணி மூப்புச் சாக்காட்டொடு வறுமையும் பசியும் பகையும் உடல் வருத்தமுங் கொண்டு வருந்துதல்.
|
|
கலைஞர் உரை:
|
|
உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும் விடக்
கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே
சிறந்தவராவார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கொல்லா விரதத்தைவிட உயர்ந்த துறவறம் வேறில்லை.) பிறவித் துன்பங்களுக்கு அஞ்சி உலகப் பற்றுக்களையெல்லாம் விட்டுவிட்டவர்கள் எல்லாரிலும், கொலைக்குற்றத்திற்கு அஞ்சிக் கொல்லா விரதம் பூண்டவனே சிறந்தவன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறப்பு என்ற நிலையினை அஞ்சி ஆசையெல்லாம் விட்ட நீத்தார்களுள் எலாம் கொலைத் தீமையினை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தினை மறவாதவன் உயர்ந்தவனாவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வாழ்வதற்கு அஞ்சி துறவறம் மேற்கொள்பவர்களைவிட கொலைத்தொழிலுக்கு அஞ்சி கொல்லாமையை அறமாகக் கொள்பவர் உயர்ந்தவர்.
|
|
Translation
|
|
Of those who 'being' dread, and all renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay.
|
|
Explanation
|
|
Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.
|
|
Transliteration
|
|
Nilaianji Neeththaarul Ellaam Kolaianjik
Kollaamai Soozhvaan Thalai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|