Thirukural

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்.

அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான். (அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.)
மணக்குடவர் உரை:
நல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால். இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது
தேவநேயப் பாவாணர் உரை:
அறவினை யாது எனின் கொல்லாமை- முழுநிறைவான அறச்செயல் எதுவென்று வினவின், அது ஓருயிரையுங் கொல்லாமையாம்; கோறல் பிறவினை எல்லாம் தரும்- கொலைவினை பிற தீவினைகளெல்லாவற்றின் பயனையும் ஒருங்கே தரும். கொல்லாமை எதிர்மறை யறவினை. கொல்லுதல் உடன்பாட்டுத்தீவினை. இரண்டும் தன் தன்மையில் முழுநிறைவானவாம். கொல்லுதல் கொல்லாமையின் மறுதலையாதலால், பிற தீவினைப் பயனையெல்லாந் தருவதொடு நல்வினைப் பயனை யெல்லாம் அழித்து விடு மென்பதும் பெறப்படும். ஆகவே, அத்தகைய மாபெருங் கொடுவினையைச் செய்யற்க என்பதாம்.
கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
புண்ணியச் செயல் எதுவென்றால், உயிர்க்கொலை செய்யாதிருப்பது; கொலை செய்வது மற்ற எல்லாப் பாவங்களையும் உண்டாக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அறம் ஆகிய செய்கை யாது என்று கேட்டால் அஃது ஓர் உயிரையும் கொல்லாமையேயாகும். அவ்வாறு கொல்லுதல் தீமையான செயல்கள் பலவற்றையும் கொடுக்கும்.
தமிழ்க்குழவி உரை:
அறச்செயல் எனப்படுவது உயிர்களைக் கொல்லாமையே ஆகும். கொலை புரிதல் என்பது வாழ்வில் எல்லா தீமைகளையும் தரும்.
Translation
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill.
Explanation
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.
Transliteration
Aravinai Yaadhenin Kollaamai Koral Piravinai Ellaan Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 321