Thirukural

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின்.

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும். ( 'உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில் தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்,
தேவநேயப் பாவாணர் உரை:
உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின்- தவஞ் செய்வான் தன் மனத்தாற் சினத்தை ஒருபோதுங் கருதானெனின்; உள்ளியது எல்லாம் உடன் எய்தும்- அவன் பெறக்கருதிய பேற்றையெல்லாம் ஒருங்கே பெறுவான். 'உள்ளத்தால்' என்னும் மிகைச்சொல் அருள்பயின்ற வுள்ளம் என்பதை யுணர்த்தும். இம்மை மறுமை வீடென்னும் மூன்றும் அடங்க "உள்ளிய தெல்லாம்" என்றார். சினம் கருத்து வடிவில் இல்லையெனின் சொற்செயல் வடிவிலும் இராதென்பது கருத்து.
கலைஞர் உரை:
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றை யெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படிப்பட்ட அபூர்வ குணம் அமைந்தால்) மனத்தில் கோபத்துக்கு இடங் கொடுக்காதவனாயிருந்தால், அவன் விரும்பினதை யெல்லாம் உடனே விரும்பியபடி அடைவான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
துறவியானவன் தன மனத்தால் கோபத்தினை ஒருபோதும் நினைக்காமல் இருப்பானானால், அவன் கருதிய செல்வங்கள் எல்லாவற்றினையும் ஒருங்கே பெறுவான்.
தமிழ்க்குழவி உரை:
ஒருவன் தன் நெஞ்சத்தில் சினத்தைப் பற்றிக் கொள்ளாதிருப்பானாயின், அவன் நினைத்தவை நினைத்த மாத்திரத்திலேயே எய்திடும் வாய்ப்புகள் உண்டு.
Translation
If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desires.
Explanation
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.
Transliteration
Ulliya Thellaam Utaneydhum Ullaththaal Ullaan Vekuli Enin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 309