Thirukural

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.

பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று. (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தொடர்வுபட்ட நெருப்பு மேன்மேலும் வந்துற்றாற்போல ஒருவன் தனக்கு இன்னாதவற்றைப் பலகாற்செய்யினும் கூடுமாயின் வெகுளாதொழிதல் நன்று. மேல் வலியவன் பொறுக்க வேண்டுமென்றார் அவன் பொறுக்குங்கால் தீமை செய்யினும் பொறுக்க வேண்டுமென்றார்.
தேவநேயப் பாவாணர் உரை:
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - கொத்தான நாவுகளுள்ள பெருந்தீ வந்து சுட்டாற் போன்ற தீங்குகளை ஒருவன் தொடர்ந்து செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று- அவனைச் சினவாமை கூடுமாயின் நன்றாம். தீமையின் மிகுதி தோன்ற 'இணரெரி' என்றும் தீவினைப்பன்மை தோன்ற 'இன்னா' என்றும் முற்றத்துறந்தவரும் பொறுத்தலருமை தோன்றப் 'புணரின்' என்றுங் கூறினார். சினத்தீ கனல் தீயினுங் கொடிது என்பது கருத்து.
கலைஞர் உரை:
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால்) கொழுந்து விட்டெரிகிற நெருப்பைக் கொண்டு சுடுவது போன்ற துன்பம் செய்கிறவர்களிடத்திலும் கூட முடியுமானால் கோபம் கொள்ளாதிருப்பதே நல்லது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பல சுடர்களையுடைய பெரிய எரி (செருப்பு) எல்லாம் வந்து ஒன்றாகச் சேர்ந்து போன்ற துன்பத்தினை ஒருவன் செய்தாலும், கூடுமானால் அவன்மீது கோபிக்காதிருத்தல் நல்லது.
தமிழ்க்குழவி உரை:
எரிகின்ற நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் ஒருவன் துன்பம் செய்தாலும் அவன்பால் கோபம் கொள்ளாத பண்பு மிக நன்று.
Translation
Though men should work thee woe, like touch of tongues of fire. 'Tis well if thou canst save thy soul from burning ire.
Explanation
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.
Transliteration
Inareri Thoivanna Innaa Seyinum Punarin Vekulaamai Nandru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 308