Thirukural

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற.

பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.
தேவநேயப் பாவாணர் உரை:
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவனது சினம் அது தாக்க முடியாத வலியார் மேல் எழின் தனக்கே தீங்காம்; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - அது தாக்கக் கூடிய எளியார் மேல் எழினும் அதைவிடத் தீயவை வேறில்லை. செல்லிடத்துச் சினத்தால் விளைவது இம்மைத் துன்பமே. ஆயின், செல்லாவிடத்துச் சினத்தால் விளைவன இம்மைப்பழியும் மறுமைத் துன்பமுமாம். அதனால் அதனினுந் தீயன வேறில்லை யென்றார்.
கலைஞர் உரை:
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதை விடக் கேடு வேறொன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எந்த இடத்திலும் கோபம் தனக்கே தீங்கு உண்டாக்கும்.) செலுத்தக்கூடாத இடத்திற் கோபத்தைச் செலுத்தினால் தனக்கு உடனே தீமை உண்டாக்கும்; செலுத்தக்கூடிய இடத்தில் கோபத்தைச் செலுத்தினால் செலுத்திய இடத்துக்கும் உடனே தீங்கு உண்டாவதுடன் பின்னால் தனக்கும் பாவமுண்டாக்கும். அதனால் அதைவிடத் தீமை தருவது வேறில்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கோபம் தன்னைவிட வலியவர்கள் மேல் உண்டாகுமானால் தனக்கே தீமையாகும். மற்ற எளியவர்கள் மீது சென்றால் அதனைவிடத் தீமையானது பிற இல்லையாகும்.
தமிழ்க்குழவி உரை:
தன்னினும் வலியார் மேல் சினம் கொள்வதால் தீங்கு நேரும். தன்னினும் மெலியார் மேல் சினம் கொள்வது அதை விடத் தீமை பயக்கும் செயல்.
Translation
Where power is none to wreak thy wrath, wrath importent is ill; Where thou hast power thy will to work, 'tis greater, evil still.
Explanation
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.
Transliteration
Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum Iladhanin Theeya Pira

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 302