|
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும்.
இது நரகம் புகுத்தும் என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளைக் கவர்தலின்கண் ஊன்றிய வேட்கை ; விளைவின்கண் வீயா விழுமம் தரும் - அற்றைக்கு நலஞ் செய்வதுபோல் தோன்றிப் பின்பு பயன் விளையுங் காலத்தில் தீராத துன்பத்தை யுண்டாக்கும்.
களவாசை வேரூன்றியதினால் மேன்மேலுங் களவிற் பயிற்றி, அதனால் இம்மைக்கும் மறுமைக்கும் தீராத பழியும் தீவினையும் விளைக்குமாதலின், 'வீயா விழுமந் தரும்' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால்
உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
திருடுவதில் ஆசை வளர்ந்துவிட்டால் அதன் பயனாக ஓயாமல் துன்பங்கள் வந்துகொண்டே யிருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
களவு என்பதில் இருக்கும் வேட்கை அப்போது இனிது போலத் தோன்றிப் பயன்தரும்போது என்றும் நீங்காத துன்பத்தினைத் தந்துவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறர் பொருளை அபகரிக்க எண்ணுகின்ற பொழுது தோன்றும் இன்பம், பின் அதன் விளைவாகத் தாங்கொண்ணாத துயரம் தரும்.
|
|
Translation
|
|
The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.
|
|
Explanation
|
|
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.
|
|
Transliteration
|
|
Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan
Veeyaa Vizhumam Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|