Thirukural

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளைக் கவர்தலின்கண் ஊன்றிய வேட்கை ; விளைவின்கண் வீயா விழுமம் தரும் - அற்றைக்கு நலஞ் செய்வதுபோல் தோன்றிப் பின்பு பயன் விளையுங் காலத்தில் தீராத துன்பத்தை யுண்டாக்கும். களவாசை வேரூன்றியதினால் மேன்மேலுங் களவிற் பயிற்றி, அதனால் இம்மைக்கும் மறுமைக்கும் தீராத பழியும் தீவினையும் விளைக்குமாதலின், 'வீயா விழுமந் தரும்' என்றார்.
கலைஞர் உரை:
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
திருடுவதில் ஆசை வளர்ந்துவிட்டால் அதன் பயனாக ஓயாமல் துன்பங்கள் வந்துகொண்டே யிருக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
களவு என்பதில் இருக்கும் வேட்கை அப்போது இனிது போலத் தோன்றிப் பயன்தரும்போது என்றும் நீங்காத துன்பத்தினைத் தந்துவிடும்.
தமிழ்க்குழவி உரை:
பிறர் பொருளை அபகரிக்க எண்ணுகின்ற பொழுது தோன்றும் இன்பம், பின் அதன் விளைவாகத் தாங்கொண்ணாத துயரம் தரும்.
Translation
The lust inveterate of fraudful gain, Yields as its fruit undying pain.
Explanation
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.
Transliteration
Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan Veeyaa Vizhumam Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 284