|
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு. ( சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு.
இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு-தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு; கூற்றம் குதித்தலும் கைகூடும்-கூற்றுவனை வெல்வதுங் கூடுவதாம்.
கூற்றுவனை வெல்வதாவது சாவினின்று தப்புதல். அது இங்கு ஒருவர்க்குங் கூடாமையின் உம்மை எதிர்மறை. மார்க்கண்டேயன் இன்று மண்ணுலகில் இல்லாமையாலும், வேறுலகிலுள்ளான் என்பது உண்மைக்கும் உத்திக்கும் பொருந்தாமையாலும், அவனைப் பற்றிய கட்டுக் கதையை இங்கு எடுத்துக்காட்டுவது எள்ளளவும் ஏற்காது. வீட்டிலகிலுள்ளா னெனின் அது உரையளவையாற் பொருந்தும். ஆயின், அதற்கும், இறைவனே அவனை என்றும் பதினாறாட்டை யுலக வாழ்வினனாக்கினான் என்பது தடை யாகும். இறைவன் முன்பு தீர்மானித்த தொன்றைப் பின்பு மாற்றினானெனின், அது அவன் இறைமையை நீக்கி மாந்தத் தன்மையையே ஊட்டும். 'ஆற்றல்' ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்' ஆம்.
|
|
கலைஞர் உரை:
|
|
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக
நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிப்பட்ட தவசிகள் எமவாதையின்றி நினைத்த மாத்திரத்தில் உடலைவிடக் கூடியவர்கள்) தவ வலிமை மிகுந்தவர் களுக்கு எமவாதனைகளை வெல்வதும் சித்திக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தவம் என்னும் நோன்பினால் வருவதாகிய ஆற்றலினைப் பெற்றவர்களுக்குக் கூற்றுவனைக் கடத்த லும் இயலும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தவவாழ்வின் ஆற்றல் கைவரப் பெற்றவர்க்கு எமனைப் பொருது இறப்பையும் வெற்றி கொள்ள இயலும்.
|
|
Translation
|
|
The E'en over death the victory he may gain,
If power by penance won his soul obtain.
|
|
Explanation
|
|
Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death).
|
|
Transliteration
|
|
Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|