Thirukural

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று.

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
தேவநேயப் பாவாணர் உரை:
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய வுணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி உடம்பைத் தின்னாமை நன்றாம். ஆரிய வேள்விகள் கொலை வேள்விகளாதலானும், ஆயிரம் வேள்விப் பயனினும் ஓருயிரியைக் கொல்லாமையின் பயன் பெரிதென்றமையானும், அவை விலக்கப்பட்டனவாம். பாட வேறுபாடு: அவிசொரிந் தாயிரம் வேட்டலன் றொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. இப்பாடம், அவிசொரிந்து ஆயிரம் வேட்டலன்று ; ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமையே நன்று என்று பொருள் தருதல் காண்க. இதில் ஏகாரம் தொக்கது
கலைஞர் உரை:
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(புலால் உண்பது துறவறத்தான் செய்யவே தகாத காரியம். அவனுடைய யோக முயற்சிகளையும் யாகமுயற்சிகளையும் விடப் பலமடங்கு சிறந்தது புலால் உண்ணாமை.) அவிர்ப் பாகங்களைக் கொட்டி ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட உண்பதற்கென்று ஓர் உயிரைக் கொல்லாதிருப்பது மேல்
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நெய் முதலியவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட ஒரு விலங்கின் உயிரினைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நல்லதாகும்.
தமிழ்க்குழவி உரை:
நெய்சொரிந்து வேள்விகள் வளர்த்து ஆண்டவனை வேண்டுவதைவிட ஓர் உயிரைக்கொன்று அதன் உடலை உண்ணாதிருத்தல் நன்று.
Translation
Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share.
Explanation
Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
Transliteration
Avisorin Thaayiram Vettalin Ondran Uyirsekuth Thunnaamai Nandru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 259