Thirukural

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்.

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.)
மணக்குடவர் உரை:
தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன் அருளுடையவனாவது மற்றியா தானோ? ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.
தேவநேயப் பாவாணர் உரை:
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண் பான்-தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரியின் உடம்பைக் கொன்று தின்பவன்; எங்ஙனம் அருள் ஆளும்-எங்ஙனந்தான் அருளைக் கையாள்பவன் ஆவன். உடம்பைப் பருக்க வைத்தற்குக் கொலையில்லாத வுணவு நிரம்ப விருத்தலானும், உடம்பை எங்ஙனம் பேணினும் அது அழிந்து போவதாதலாலும், ஊனுணவு பெறுதற்கு ஓர் உயிரியை எள்ளளவும் இரக்கமின்றிக் கொல்ல வேண்டியிருத்தலானும், குற்றமற்றவுயிரிகளை மேன்மேலுங் கொல்வது கொடுமையினுங் கொடுமையாதலானும், 'எங்ஙனம் ஆளும் அருள்' என்றார். ஆளவே ஆளான் என்பது விடை. உயிருள்ளது உயிரி (பிராணி)
கலைஞர் உரை:
தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தன்னுடைய உடல் பெருக்க வேண்டுமென்று இன்னொரு பிராணியைக் கொன்று அதன் உடலை உண்பவன் எப்படி அருளுடையவனாக முடியும்?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தன்னுடைய உடம்பினை வளர்ப்பதற்காக, தான் மற்றொரு உயிரின் உடம்பினைத் தின்பவன் எவ்வாறு அருளினை நடத்துவான்?.
தமிழ்க்குழவி உரை:
தன் உடலை வளர்ப்பதற்கு பிறிதோர் உயிரைக்கொன்று அதன் ஊனை உண்பவன் மனதில் எங்ஙனம் அருள் ஆளுமை கொள்ளும்?
Translation
How can the wont of 'kindly grace' to him be known, Who other creatures' flesh consumes to feed his own?.
Explanation
How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.
Transliteration
Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan Engnganam Aalum Arul

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 251