Thirukural

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இசை என்னும் எச்சம் பெறாவிடின் - புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவாராயின், வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப - வையகத்தோர்க்கு எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர். ( 'எச்சம்' என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது 'நிற்றலின்' இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர். மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றார்.
தேவநேயப் பாவாணர் உரை:
இசை என்னும் எச்சம் பெறாவிடின்-ஒருவன் புகழைத் தனக்குப் பின் நிறுத்தாவிடின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப- அது உலகத்திலுள்ள மக்கட் கெல்லாம் பழிப்பாகு மென்று கூறுவர் நல்லோர். புகழ் மக்களைப் போல எஞ்சி நிற்பது என்னுங் கருத்துப்பட 'எச்சம் பெறாஅ விடின்' என்றார். மக்களெல்லாரும் ஓரினத்தாராதலானும், புகழ்பட வாழ்தலே உயர்திணைப் பண்பாதலானும், ஒருவன் பழி அவன் இனத்தையும் சாரும் என்னும் நெறிமுறை பற்றி, வையத்தார்க் கெல்லாம் வசை யென்றார். 'பெறாஅ' இசைநிறை யளபெடை.
கலைஞர் உரை:
தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும்.
சாலமன் பாப்பையா உரை:
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(எந்த விதத்திலாவது சிறிதேனும் புகழ் தேடிக் கொள்ளா விட்டால்) உலகத்திற் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவனுக்குப் பின் அவரைப் புகழ்ந்து பேசக்கூடிய ஏதாவது ஒன்றையேனும் மிச்சம் விட்டுப் போகாவிட்டால் அது குற்றமென்றே சொல்லப்படும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இசை (புகழ்) என்று இருக்கக்கூடிய எச்சத் தினைப் பெறாவிட்டால், உலகில் உள்ளவர்களுக்கெல்லாம் அதுவே வசையாகும் என்று உயர்ந்தோர் சொல்லு வார்கள்.
தமிழ்க்குழவி உரை:
புகழ் என்றும் நற்பேற்றை ஒருவர் தன் வாழ்நாளில் பெற்று மகிழாக்கால், அவ்வாழ்க்கையானது பழியின்பாற் பட்டதே ஆகும்
Translation
Fame is virtue's child, they say; if, then, You childless live, you live the scorn of men.
Explanation
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.
Transliteration
Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum Echcham Peraaa Vitin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 238