Thirukural

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; 'அஃது இலார்' தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், 'மக்களாய்ப் பிறவாமை' என்ற அருத்தாபத்தியான் 'விலங்காய்ப் பிறத்தல்' என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் 'நன்று' என்றார்)
மணக்குடவர் உரை:
பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தோன்றின் புகழொடு தோன்றுக-ஒருவர் இவ்வுலகத்திற் பிறக்கின் புகழ்க் கேதுவான குணத்தொடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குண மில்லாதார் பிறத்தலை விடப் பிறவாதிருத்தலே நல்லது. பிறத்தலும் பிறவாமையும் இறைவன் ஏற்பாட்டின்படி அல்லது ஊழின் அமைப்புப்படியே நிகழ்வதால், அவை பிறப்பவரின் உணர்ச்சியொடு கூடியனவும் விருப்பிற்கு அடங்கியனவுமல்ல. ஆதலால், இங்குத் 'தோன்றுக', 'தோன்றற்க' என்று கூறியதெல்லாம், புகழுக் கேற்ற நல்வினை செய்வானைப் பாராட்டியதும் அது செய்தானைப் பழித்ததுமேயன்றி வேறல்ல என அறிக . புகழ் என்பது இங்கு ஆகுபொருளது.
கலைஞர் உரை:
எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
எந்தக் காரியத்துக்கானாலும் பல பேருக்கிடையில் நானென்று முன்னால் வருகிறவன் அந்தக் காரியத்திலாவது புகழுள்ளவனாக இருக்கவேண்டும். அது இல்லாதவன் முன்னால் வருவதைவிட மறைவில் இருப்பதே நல்லது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மக்களாகப் பிறத்தல் புகழுண்டாவதற்கான குணங்களோடு பிறத்தல் வேண்டும். அக்குணம் இல்லா தவர்கள் மக்களாகப் பிறப்பதைவிடப் பிறவாதிருத்தலே நல்லதாகும்.
தமிழ்க்குழவி உரை:
பணி செய்ய முனையும் ஒருவர் அதனைத் திறம்படச் செய்து புகழ்பெறல் வேண்டும். இல்லையேல், பணியைத் தொடங்காமலே இருந்து விடல் நன்று
Translation
If man you walk the stage, appear adorned with glory's grace; Save glorious you can shine, 'twere better hide your face.
Explanation
If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born
Transliteration
Thondrin Pukazhotu Thondruka Aqdhilaar Thondralin Thondraamai Nandru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 236