Thirukural

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவ தில்லை யென்று தானே யறிக. இது கேடில்லை யென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மருங்கு ஓடித்தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு பக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக - அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்து கொள்க. அருமை இங்கு இன்மை குறித்தது. அருங் கேடன் என்பது காலில்லாதவனை இல்லாக் காலன் என்றாற் போல்வது. இது செய்யுள் வழக்கு. மருங்கோடுதல் விரைந்து விலகுதல்.
கலைஞர் உரை:
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
சாலமன் பாப்பையா உரை:
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால்) ஆத்திரப்பட்டுப் பிறருக்குத் தீமை செய்யாமல் இருப்பவனே தனக்கு ஒரு துன்பமும் வராமல் இருக்க கூடியவன் என்பதை அறிய வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன் கொடுமையான வழியிலே சென்று தீச் செயல்களைப் பிறருக்குச் செய்யாதிருப்பானானால் அவன் கெடுதி இல்லாதவன் என்பதனை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
தவறான வழிகளில் சென்று ஒருவன் தீய செயல்களைக் செய்யாதிருந்தான் எனில், அவன் வாழ்வில் கேடு நேராது என அறிந்து கொள்க.
Translation
The man, to devious way of sin that never turned aside, From ruin rests secure, whatever ills betide.
Explanation
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.
Transliteration
Arungetan Enpadhu Arika Marungotith Theevinai Seyyaan Enin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 210