Thirukural

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக. இது நோயுண்டாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்-துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை விரும்பாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க-தீமை செய்யுந் திறத்தனவாகிய வினைகளைத் தான் பிறரிடத்துச் செய்யாதிருக்க. தன்னலம் பற்றியேனும் பிறர்க்குத் தீமை செய்யாதிருக்க என்றவாறு.
கலைஞர் உரை:
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத் தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பிறருக்குத் தீமை செய்தாலும் செல்வம் வருவது நிச்சயமல்ல; ஆனால் துன்பம் வருவது நிச்சயம். அதனால்) துன்பம் உண்டாக்கக் கூடிய தீவினைப் பயன்கள் பின்னால் தன்னை வருத்தப்படாமல் இருக்க விரும்புகின்றவன், பிறருக்குத் தீமை செய்யாமலிருக்க வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தமக்குப் பின்பு துன்பங்களை வந்து வருத்த வேண்டாமென்று நினைப்பவர்கள், பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருப்பார்களாக.
தமிழ்க்குழவி உரை:
தனக்கு யாதொரு துன்பமும் நேரலாகாது என எண்ணுகிறவன் எந்த நிலையிலும் பிறருக்கு நீங்கு செய்தல் கூடாது.
Translation
What ranks as evil spare to do, if thou would'st shun Affliction sore through ill to thee by others done.
Explanation
Let him not do evil to others who desires not that sorrows should pursue him.
Transliteration
Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala Thannai Atalventaa Thaan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 206