|
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தீய தீயவே பயத்தலால்-ஒருவன் தனக்கின்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம்.
தீயானது தொட்டவரைச் சுடினும் எரிப்பினும், சமைத்தலும் குளிர் போக்கலும் நோய் நீக்கலும் கொடுவிலங்கு விரட்டலுமாகிய நன்மைகளையுஞ் செய்தலாலும்; தீவினையானது செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின்பு வேறொரு காலத்திலும் வேறொரிடத்திலும் வேறோ ருடம்பிலுஞ் சென்று சுடுதலாலும், எவ்வகை நன்மையுஞ் செய்யாமையாலும்; 'தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றார். தீவினை நன்மை செய்யாமை பற்றியே 'தீயவே' என்னும் பாடம் இங்குக் கொள்ளப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத்
தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட
வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(தீமை செய்வது நெருப்பை விடக் கொடியது) நெருப்பு மற்றப் பொருள்களை எரித்துச் சாம்பலாக்குமே யன்றி நெருப்பு வைத்தவனை ஒன்றும் செய்யாது. ஆனால் பிறருக்குத் தீமை செய்வது தனக்கே தீமை உண்டாக்குமாகையால், அது நெருப்பைவிடக் கொடியது என்று அதற்கு அஞ்ச வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தீச் செயல்கள் தீமையினையே கொடுப்பதால் தீச் செயல்கள் தீயினைவிடக் கொடுமையென்று அஞ்சப் படும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தீய செயல்கள் தீமையையே விளைவிப்பதால் தீயினும் கொடியவை. அச்செயல்களை விளைவுகள் கருதி அஞ்சித் தவிர்த்தல் வேண்டும்.
|
|
Translation
|
|
Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.
|
|
Explanation
|
|
Because evil produces evil, therefore should evil be feared more than fire.
|
|
Transliteration
|
|
Theeyavai Theeya Payaththalaal Theeyavai
Theeyinum Anjap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|