Thirukural

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று.

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று ('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.)
மணக்குடவர் உரை:
சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
சான்றோர் நயன் இல சொல்லினும் சொல்லுக - அறிவுடையோர் நேர்மையில்லாத சொற்களை என்றேனும் தப்பித் தவறிச் சொல்லினும் சொல்லுக; பயன் இல சொல்லாமை நன்று.. ஆயின் எக்கரணியத்தையிட்டும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தலே அவர்க்கு நன்றாம். இது நேர்மையில்லாச் சொல்லை நெருக்கடி நிலைமையிற் சொல்ல இசைவளித்ததன்று; நேர்மையில்லாச் சொல்லினும் பயனில்லாச் சொல் தீயதென்பதை உணர்த்துவதேயாம்.
கலைஞர் உரை:
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால்) அறிவொழுக்கங்களாற் சிறந்தவர்கள், பிறரைக் கண்டிக்க, அன்பில்லாத வார்த்தைகளைச் சொன்னாலும் சொல்லுவார்கள்; ஆனால் வீண் வார்த்தைகளைப் பேசமாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
சான்றோர்கள், நயமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுவார்களாக; பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நல்லதாகும்.
தமிழ்க்குழவி உரை:
செழுமை குறைந்த சிறப்பேதும் இல்லாத சொற்களைப் பேசினும் பேசுக; யாதொரு பயனும் இல்லாத சொற்களைப் பேசாதிருத்தல் நன்று.
Translation
Let those who list speak things that no delight afford, 'Tis good for men of worth to speak no idle word.
Explanation
Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.
Transliteration
Nayanila Sollinunj Cholluka Saandror Payanila Sollaamai Nandru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 197