Thirukural

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் - தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும். (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.
தேவநேயப் பாவாணர் உரை:
அழுக்காறு என ஒரு பாவி-பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்-தன்னை யுடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான். பொறாமைக் குணத்தை ஒரு கொடியனாகக் குறித்தது ஆட்படையணி (Personification). தீயுழி என்பது எரிவாய் நரகத்தின் பெயர். விடும் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. கரிசி (பாவம்)-கரிசன் (ஆண்பால்), கரிசு (பெண் பால்).
கலைஞர் உரை:
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீயவழியிலும் அவனை விட்டுவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால்) பொறாமை என்ற பாவம் செல்வத்தையும் அழித்து, பல தீமைகளிலும் தள்ளிவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பொறாமை என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி தன்னுடையானுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய நிலைக்குள் தள்ளிவிடுவான்.
தமிழ்க்குழவி உரை:
பொறாமை என்கின்ற ஒரு 'பாவி' ஒருவனுடைய செல்வச் செழிப்புகளையெல்லாம் சிதைத்து விட்டு அவனைத் தீவினைக்கண் செலுத்திவிடும்.
Translation
Envy, embodied ill, incomparable bane, Good fortune slays, and soul consigns to fiery pain.
Explanation
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come).
Transliteration
Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth Theeyuzhi Uyththu Vitum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 168