Thirukural

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்.

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை - மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை. (அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை. இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாரிடத்தும் பொறாமையில்லா தொழுகுதலை ஒருவன் பெறுமாயின்; விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை - அவன் பெறுஞ் சிறந்த பேறுகளுள் அதை யொப்பது வேறு ஒன்றும் இல்லை. 'யார் மாட்டும் ' என்றதால் , பகைவரிடத்தும் பொறாமை கொள்ளுதல் விலக்கப்பட்டது.
கலைஞர் உரை:
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
யாருடைய நல்வாழ்வைக் கண்டும் பொறாமை கொள்ளாத மனப்பான்மை அடைந்துவிட்டால், விரும்பத்தக்க மேலான செல்வங்களுள் அதற்கு இணையாவது வேறில்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன் யாவரிடத்திலும் பொறாமை இல்லாமல் இருப்பதே சிறந்த செல்வமாகும். அவன் பெறுகின்ற சீரிய செல்வங்களுள், அச்செல்வத்திற்குச் சமமானது வேறு எதுவும் இல்லை.
தமிழ்க்குழவி உரை:
யார்மாட்டும் பொறாமை கொள்ளாத பண்பை ஒருவன் வாழ்வியல் நெறியாகக் கொள்வானாயின் அதனினும் சிறந்ததாகக் கூறுவதற்கு யாதொன்றும் இல்லை.
Translation
If man can learn to envy none on earth, 'Tis richest gift, -beyond compare its worth.
Explanation
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.
Transliteration
Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum Azhukkaatrin Anmai Perin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 162