|
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உண்ணாது நோற்பார் பெரியர் - விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின் (பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின்,
இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உண்ணாது நோற்பார் பெரியர் - நோன்பினால் உணவைத் தவிர்ந்து பசியையும் தட்ப வெப்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் துறவியர் மக்கட்குட் பெரியவரே; பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின் - ஆயின் அவர் பெரியவராவது பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் இல்லறத்தார்க்கு அடுத்தபடியே.
பிறர் என்றது தீயவரை. இன்பம் பெறுதற்குரிய இல்லறத்திலிருந்து கொண்டே துன்பம் பொறுத்தற்குரிய துறவியரினும் மிகுந்த பொறையை மேற்கொள்வதால், முதற்படியாகப் பெரியவர் என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப்
பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த
நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) உணவு முதலிய சுகங்களைத் துறந்து பல துன்பங்களைச் சகித்துக் கொள்ளுகிற பெரியோர்களாகிய துறவிகளும் கூடப் பிறர் சொல்லும் வசை மொழிகளால் உண்டாகும் துன்பங்களைச் சகித்துக் கொள்கிறவர்களுக்கு மட்டமானவர்கள்தாம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உண்ணாமல் நோன்பு நோற்றுத் தவம் செய்பவர்கள், எல்லோரினும் பெரியவர்களாவார்கள். அவர்கள் பிறர் சொல்லும் துன்பமான சொற்களையும் பொறுத்துக் கொள்ளுபவர்களுக்கு அடுத்தே பெரியவர்களாக மதிக்கப்படுவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பிறர்கூறும் கடுமையான சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், உடல்வருந்தி உண்ணா நோன்பு மேற்கொள்பவர்களைவிடச் சிறந்தவரே ஆவார்.
|
|
Translation
|
|
Though 'great' we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain.
|
|
Explanation
|
|
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.
|
|
Transliteration
|
|
Unnaadhu Norpaar Periyar Pirarsollum
Innaachchol Norpaarin Pin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|