Thirukural

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லைஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.)
மணக்குடவர் உரை:
மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம். இஃது உயர்ச்சியில்லையா மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - பொறாமையுள்ளவனிடத்திற் செல்வமில்லாதது போல , ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை - ஒழுக்கமில்லாதவனிடத்து உயர்வு இல்லை . உயர்வு உயர்குலத்தானாதல் .
கலைஞர் உரை:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பிறப்பின் மேன்மை மட்டுமல்ல;) பொறாமை உள்ளவ னுக்குச் செல்வம் சேராது; சேர்ந்தாலும் நிலைக்காது; அதுபோல ஒழுக்கமில்லாதவனுக்கு மேன்மை இருக்காது; இருந்தாலும் தங்காது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பொறாமை உள்ளவனிடத்தில் செல்வப் பெருக்கம் இல்லாததுபோல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்ச்சி என்பது இல்லாததாகிவிடும்.
தமிழ்க்குழவி உரை:
பொறாமைப் பண்பு உடையவரிடம் செல்வம் நிலைத்திருக்காது. அதுபோல ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்வில் மேன்மை என்பதே இல்லை.
Translation
The envious soul in life no rich increase of blessing gains, So man of 'due decorum' void no dignity obtains.
Explanation
Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.
Transliteration
Azhukkaa Rutaiyaankan Aakkampondru Illai Ozhukka Milaankan Uyarvu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 135