|
ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும்; விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை. (அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக்கூட்டம் முடியாது' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால்.
இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.)
ஊடல் உணங்க விடுவாரோடு - ஊடல்கொண்ட போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு; என் நெஞ்சம் கூடுவேம் என்பது - என் உள்ளம் கூடியின்புறுவேம் என்று, கருதுகிறதற்குக் கரணியம்; அவா - அதன் ஆசையேயன்றி வேறன்று.
இதற்குப் பரிமேலழகருரை வருமாறு -
(உணர்ப்புவயின் வாராவூடற்கட்டலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது.)
ஊடல் உணங்க - தானூடற்கண்ணே மெலியா நிற்கவும்; விடுவாரோடு கூடுவேம் என்பது என்னெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேமென்று என்னெஞ்சம் முயறற்கேது தன்னவாவே பிறிதில்லை.
என்பதற்கேது என இருக்கவேண்டியது. 'என்பது' எனக் கருமகம் (காரியம்) கரணமாக (காரணமாக) ச்சார்த்திக் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன்
கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத
ஆசையே காரணம்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(காதலி ஏங்குகிறாள்;) இவ்வளவு நேரமாக என்னைப் பிணக்கத்தில் வாடவிட்டிருக்கிற காதலர் என்னைப் புணர்வார் என்ற ஆசை எனக்கு விட்டுப் போய்விட்டது. ஆனால் என் மனம் இன்னும் ஆசைப்படுகிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தான் ஊடலினால் மெலிந்து நிற்கவும் விட்டிருக்க வல்லவரான காதலருடன் கூடக்கடவோம் என்று எனது நெஞ்சம் முயலுதற்குக் காரணம் தனது ஆசையேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நீரும் நிழலோடு இருந்தால் தான் இனிது. அது போல் ஊடலும் அன்புடையவர் மாட்டு இருந்தால் தான் இனிதாகும்.
|
|
Translation
|
|
Of her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire
|
|
Explanation
|
|
It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike
|
|
Transliteration
|
|
Ootal Unanga Vituvaarotu Ennenjam
Kootuvem Enpadhu Avaa
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|