|
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு - சேணிடைச் சென்ற தம் காதலர் மீண்டுவரக் குறித்தநாளை உட்கொண்டு, அது வரும் துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்கு; ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் - ஒரு நாள் பல நாள் போல நெடியதாகக் காட்டும். ('ஏழ்' என்பது அதற்குமேலாய மிக்க பன்மை குறித்து நின்றது; 'ஒருவர் கூறை எழுவர் உடுத்து' என்றாற்போல. தலைமகள் வருத்தம் பிறர்மேலிட்டுக் கூறியவாறு. இதனான் இதுவும் தலைமகள் கூற்றாகாமையறிக. 'இரு நாள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நெடுநெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுதுதானே ஏழுநாளைப் போலச் செல்கின்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இதுவுமது) சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்கு பவர்க்கு- நெடுந்தொலைவு சென்ற தம் காதலர் திரும்பி வருவதாகக் குறித்த நாளை மனத்துட்கொண்டு, அது வருமளவும் ஏக்கம் பிடித்து வருந்தும் மகளிர்க்கு; ஒருநாள் எழு நாள் போல் செல்லும்- ஒரு நாளே பலநாள் போல் நெடிதாகத் தோன்றும். ஏழு என்னும் நிறைவெண் இங்குக் கழிபன்மை யுணர்த்தி நின்றது. முன்பு தலைமகள் பட்டறிவையறிந்த தலைமகன் அதைப் பொதுப்படுத்திக் கூறியவாறு. இருநாளென்று பாடமோதுவாரும் இருந்தமை பரிமேலழக ருரையால் தெரியவருகின்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தூரதேசம் போயிருக்கிற கணவன் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கும் மனைவிக்கு ஒரு நாள் போவது ஏழு நாட்கள் போல இருக்கும்.(அதனால் நான் விரைந்து போகவேண்டும்.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தூர தேயத்திற்குச் சென்றிருக்கும் காதலரை எண்ணி வருந்தியிருக்கும் மகளிர்க்கு ஒருநாள் பல நாட்களாக நெடிதாகக் கழியும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
என்னைப் பிரிந்து சென்ற காதலரை எண்ணித் தவிக்கும் போது ஒவ்வொரு நாளும் எனக்கு ஏழு நாட்கள் போல நெடிதாகத் தோன்றுகிறது.
|
|
Translation
|
|
One day will seem like seven to those who watch and yearn
For that glad day when wanderers from afar return.
|
|
Explanation
|
|
To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.
|
|
Transliteration
|
|
Orunaal Ezhunaalpol Sellumsen Sendraar
Varunaalvaiththu Engu Pavarkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|