|
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு. ('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கண்ணின் பசப்போ- தென்றற் காற்று இடையிற் புகுந்ததனால் வந்த கண்ணின் பசலையோ; ஒள் நுதல் செய்தது கண்டு- தனக்கு அயலிலுள்ள ஒளிபொருந்திய நெற்றி பசந்தது கண்டு; பருவரல் எய்தின்று - துன்பமடைந்தது. பொருள்களைக் காணுந் தன்மையில்லாத நெற்றி கைகளைத் தளர்த்த வளவிற் பசந்துவிட்டது. ஆனால், அத்தன்மையுள்ள நானோ கைகளைத் தளர்த்த பின் சிறுகாற்று ஊடறுக்கு மளவும் பசவாது வெறுமனே கண்டுகொண்டிருந்தேன், எனத் தன் மென்மைக்கேலாத வன்மையையும் அதன் வன்மைக் கேலாத மென்மையையும் ஒப்புநோக்கி வெட்கிப் போயிற்றென்பதாம். இங்ஙனம் அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலனழியும். ஆதலால், யாம் விரைந்து சென்று அவளை யடைதல்வேண்டுமென்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என் காதலி முன் (என்னைப் பிரிந்தபோதெல்லாம்) படும் துன்பத்தை இப்போது பட்டுக்கொண்டிருப்பதுபோலவே எனக்கு முன் தோன்றி, எனக்குத் துன்பமுண்டாக்குகிற இது, என் கண்ணின் மயக்கமோ அல்லது உண்மைதானோ?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனக்கு அருகில் இருக்கும் ஒளிபொருந்திய நெற்றியடைந்த பசப்பு நிறத்தினைக் கண்டு கண்களின் பசப்பு நிறம் துன்பத்தினை அடைந்து விட்டது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒளி பொருந்திய நெற்றியில் தோன்றிய பசலையைக் கண்டு கண்களில் பூத்த பசலையே கவலை கொள்கிறது.
|
|
Translation
|
|
The dimness of her eye felt sorrow now,
Beholding what was done by that bright brow.
|
|
Explanation
|
|
Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?.
|
|
Transliteration
|
|
The dimness of her eye felt sorrow now,
Beholding what was done by that bright brow
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|