Thirukural

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது.

பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய். (முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(பொழுதொடு புலந்தது) பொழுது - மாலைப்பொழுதே!; நீ மாலையோ அல்லை - நீ முன்னாட்களில் வந்த மாலைப்பொழுதே யல்லை ; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - காதலரை மணந்து பிரிந்த மகளிரைக் கொல்லும் இறுதிக் காலமாகவே யிருக்கின்றாய், இந்நாள். முன்னாள் காதலரொடு கூடியிருந்த நாள்.தன்னைப் போற் காதலரைப் பிரிந்த பிறரையும் உளப்படுத்தி 'மணந்தார்' என்றாள். 'வாழி' யென்பது எதிர்மறைக்குறிப்பு.வேலை எல்லை; இங்கு வாழ்நாளெல்லையைக் குறித்தது.வேலையென்பதற்கு வேலாயிருந்தாய் என்றுரைப்பர் மணக்குடவ பரிதி பரிப்பெருமாளார்.
கலைஞர் உரை:
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!.
சாலமன் பாப்பையா உரை:
பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மாலைப்பொழுது காம வேதனையை அதிகப்படுத்தும் இயல்புடையது. அந்த மாலைப் பொழுதைக் கண்டு காதலி கலங்குகிறாள்:) மாலைப் பொழுதே! உன்னை மாலைவேளை யென்று சொல்வது சரியல்ல. மணந்து பிரிந்திருக்கும் காதலர்களின் உயிரை வதைக்கும் மரண காலமென்று சொல்லுவதுதான் பொருந்தும். நீ வாழ்க.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மாலைப் பொழுதுதே! நீ முந்தைய நாட்களில் வந்த மாலைப்பொழுது அல்ல; அந்த நாளில் காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் முடிவுக் காலமாய் இப்போது இருக்கின்றாய்.
தமிழ்க்குழவி உரை:
மாலைப் பொழுதா நீ இல்லை இல்லை, காதலரோடு மகிழ்ந்து இருந்து இப்போது பிரிந்து இருப்பவர்களின் உயிரைப் பறிக்கின்ற வேலாகத் தோன்றுகிறாய், வாழ்க நீ
Translation
Thou art not evening, but a spear that doth devour The souls of brides; farewell, thou evening hour!.
Explanation
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women.
Transliteration
Maalaiyo Allai Manandhaar Uyirunnum Velainee Vaazhi Pozhudhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1221