|
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்? (நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்; இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(அவரொடு கூடி நுகர்ந்தகாலை யின்பத்தை நினைந்து இறந்து படுநிலை யடைகின்றாய். அதை மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) யான் அவரோடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு கூடிய காலை யின்பத்தை இடைவிடாது நினைத்தலாலேயே இன்று இறந்து படாதிருக்கின்றேன்; மற்று யான் என் உளேன் - வேறு எவ்வகையில் நான் உயிர்வாழ முடியும்? நான் உயிர்வாழ்வதற்குக் காதலர் தூது வருதல். நம் தூது அவரிடம் சேர்தல் முதலிய பிறவழிகளும் உளவேனும், யான் அவை பெற்றிலேன் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது என்பர் பரிமேலழகர். 'நாள்' ஆகுபொருள்.
|
|
கலைஞர் உரை:
|
|
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(இப்படித் துன்புறுவதைவிட இறப்பதே மேல்.) அவரோடு நான் அனுபவித்த இன்பத்தை நினைத்து அவ்வின்பத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையினால் என் உயிர் போகமாட்டேனென்கிறதே!
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நான் அவருடன் இன்பம் நுகர்ந்த நாளினை நினைப்பதால் இத்துன்பக் காலத்திலும் உயிர்வாழ்கின்றேன். அவ்வாறு இல்லாமற் போனால் வேறு எப்படி உயிர் வாழ்ந்திருப்பேன்?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அவரோடு கூடியிருந்த மகிழ்ச்சியான நாட்களை எண்ணி எண்ணித்தான் நான் உயிரோடு இருக்கிறேன். இல்லையேல் யான் எப்படி உயிர் தரித்தல் முடியும்?
|
|
Translation
|
|
How live I yet? I live to ponder o'er
The days of bliss with him that are no more.
|
|
Explanation
|
|
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?.
|
|
Transliteration
|
|
Matriyaan Ennulen Manno Avaroti Yaan
Utranaal Ulla Ulen
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|