Thirukural

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக - அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக. (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.)
மணக்குடவர் உரை:
தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.
தேவநேயப் பாவாணர் உரை:
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருதுமாயின் ; யான் கெடுவல் என்பது அறிக - அக்கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு , " நான் இனிக்கேடடைவேன் , " என்று திட்டமாய் அறிந்து கொள்க. கருதுதல் மனத்தின் செயலாதலின் ' செயின் ' என்றார் . ஒருவி என்பது ஒரீஇ என அளபெடுத்தது இன்னிசை யளபெடை . நெஞ்சார நடுநிலை திறம்புவார்க்கு எச்சரிக்கை இக்குறளாற் கூறப் பட்டது.
கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(நடுவு நிலைமை தவறக் கூடாது என்பதை ஒருவனுடைய மனச்சாட்சியே சொல்லும்.) ஒருவன் நடுவு நிலைமை தவறிப் பாரபட்சமாக ஒரு தீர்ப்புச் சொல்ல நினைக்கும்போது அவனுடைய மனச்சாட்சி 'நான் கெட்டுப்போவேன்' என்று எச்சரிக்கும். அதை அறிய வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுடைய நெஞ்சம் நடுவு நிலைமையில் நீங்கி ஒன்றினைச் செய்ய நினைக்குமானால் அந்த நினைப்பு 'யான் கேட்டு விடுவேன்' என்பதை உணர்த்தும் முன்னறிவிப்பாக அறிதல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
நெஞ்சம் நடுவுநிலைமை பிறழ்ந்து தவறு செய்ய முற்படுமாயின் அந்த பொழுதே தனக்கு கேடு வந்துற்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
Translation
If, right deserting, heart to evil turn, Let man impending ruin's sign discern!.
Explanation
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish.".
Transliteration
Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam Natuvoreei Alla Seyin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 116