|
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார். எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இதுவுமது) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது-குவளைமலர் போலுங் கண்ணையுடையாளைப் பெறுதற் கருமையை அறியாது; இவ்வூர் எமக்கு அலர் ஈந்தது-இவ்வூரார் அவளை எளியளாக்கி என்னொடு தொடர்பு படுத்தும் அலரை எனக்கு அளித்துதவினர். 'அருமை' அல்ல குறிப்பாட்டாலும் பல்வேறு இடையீடுகளாலும் தடைகளாலும் நேர்ந்தது. ஆருயிரளித்த பேருதவிபற்றி 'ஈந்தது' என்றான். 'ஊர்' வரையறுத்த ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மலர் போன்ற கண்களை யுடைய அவளது அருங் குணத்தை அறியாத இந்த ஊரார் என்னைப்பற்றிப் பரிகாசம் செய்தார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மலர்போன்ற கண்ணினையுடைய இப்பெண்ணின் அருமையினை அறிந்து கொள்ளாமல் இவ்வூர் அப்பெண்ணை எளியவளாகக் கருதி அலர் கூறுவதைச் செய்தது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மலர் போன்ற கண்களை உடைய எம் காதலியின் அருமையை அறியாது பழித்துப் பேசுகிறது இவ்வூர்; இது மிக நன்றே.
|
|
Translation
|
|
The village hath to us this rumour giv'n, that makes her mine;
Unweeting all the rareness of the maid with flower-like eyne.
|
|
Explanation
|
|
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.
|
|
Transliteration
|
|
Malaranna Kannaal Arumai Ariyaadhu
Alaremakku Eendhadhiv Voor
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|