Thirukural

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.

யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது,) யாம் கண்ணின்காண அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு - அவர் அங்ஙனஞ்செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான். ('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகாநின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.)
மணக்குடவர் உரை:
யாங் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை யறிவிலார் நகாநின்றார். அவரங்ஙனஞ் செய்கின்றது யாமுற்ற நோய்கள் தாமுறாமையான்.
தேவநேயப் பாவாணர் உரை:
(செவிலிக் கறத்தொடு நின்றுவைத்து , யான் அறத்தொடு நிற்குமாறு எங்ஙனமென்று நகையாடிய தோழியொடு புலந்து , தலைமகள் சொல்லியது . ) அறிவு இல்லார் - அறிவிலாதார் ; யாம்பட்ட தாம் படா ஆறு - யாம் பட்ட நோய்களைத் தாம்பட்டு அறியாமையால் ; யாம் கண்ணின் காண நகுப - யாம் காதாற் கேட்குமாறு மட்டுமன்றிக் கண்ணாலுங் காணுமாறு எம்மை நகையாடுவர். தோழி அறத்தொடு நின்றமையை அறியாது புலக்கின்றாளா தலின் , அவளை அயலாளாக்கிக் கூறினாள் . ' கண்ணிற்காண ' என்றது முன் கண்டறியாமை யுணர்த்தி நின்றது . இது சேட்படுத்தி நகையாடிய தோழிக்குத் தலைமகன் கூறியதாகவுங் கொள்வர். தலைமகன் கூற்று முன்னரே ஏழாங் குறளொடு முடிந்துவிட்டமை யாலும், தோழியின் துணையை இன்றியமையாததாகக் கொண்ட தலைமகன் அவளை அறிவில்லாளென்று பழித்தல் இயல்பன்மையானும், அது பொருந்தாதென்க.
கலைஞர் உரை:
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நான் படும் துன்பங்களைத் தாம் படாத காரணத்தால் அறிவில்லாதவர்கள் எனக்குத் தெரியும்படி என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
யாம் அடைந்த நோய்களை அறிவில்லாதவர்கள் அடையாமையினால் யாம் கண்ணாற் காணுமாறு எம்மைப் பார்த்து அவர்கள் நகைக்கின்றார்கள்.
தமிழ்க்குழவி உரை:
நான் படும் இக் காதல் துன்பத்தை யாரும் அனுபவித்தறியாத காரணத்தால்தான் என் கண் முன்னே எள்ளி நகையாடுகின்றனரோ?
Translation
Before my eyes the foolish make a mock of me, Because they ne'er endured the pangs I now must drie.
Explanation
Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.
Transliteration
Yaamkannin Kaana Nakupa Arivillaar Yaampatta Thaampataa Aaru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1140