|
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
என்னை யொழிந்த எல்லாரும் அறிவிலரென்றே சொல்லி என் காமமானது தலை மயங்கி மறுகின் கண்ணே வெளிப்படச் சுழலா நின்றது. சுழல்தல் - இவ்வாறு சொல்லித் திரிதல்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இதுவுமது) என் காமம்-எனது காமம் ; எல்லாரும் அறிகிலார் என்று - யான் இதுவரை அடங்கி நின்றதால் எல்லாரும் என்னை அறிந்திலர் , இனிமேல் அவ்வாறிராது நானே வெளிப்பட்டறிவிப் பேனென்று எண்ணி ; மறுகில் மருண்டு மறுகும் - இவ்வூர்ப் பெருந் தெருவெல்லாம் மயங்கிச் சுழலும் . மயங்குதல் அலரத் தொடங்குதல் ; மறுகுதல் அலராதல் . இனி அறத்தொடு நிற்றல்வேண்டும் என்பது குறிப்பு . அறிவிலார் என்பதும் பாடம் .
|
|
கலைஞர் உரை:
|
|
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எப்படி யெனில்) வீட்டிலுள்ளவர்கள் மட்டுமன்றி ஊரிலுள்ள எல்லாரும் என் நிலைமையை அறிந்து கொள்ளும்படியாக என்னுடைய காம நோய் என்னை வீதிக்குச் சென்று (என் காதலர் வரமாட்டாரா என்று) வெறி பிடித்தது போல அங்குமிங்கும் பார்த்துத் தவிக்கச் செய்துவிட்டது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
'யான் முன்பு அடங்கி இருந்ததால் எல்லாரும் என்னை அறியவில்லை". இனி அவ்வாறின்றி யானே வெளிப்பட்டு அறிவிப்பேன் என்று கருதி என் காமம் இவ்வூர் வீதியின் கண்ணே மயங்கிச் சுழல்கின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
யாரும் அறிகிலர் என்றே நான் அமைதியாக இருந்தும் எம் காதல் இன்று வெளிப்பட்டு திகைத்திடும் வகையில் தெருவெல்லாம் பேசப்படுகிறது.
|
|
Translation
|
|
'There's no one knows my heart,' so says my love,
And thus, in public ways, perturbed will rove.
|
|
Explanation
|
|
My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).
|
|
Transliteration
|
|
Arikilaar Ellaarum Endreen Kaamam
Marukin Marukum Maruntu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|