Thirukural

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னும்இவ் வூர்.

காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். ('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர். தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலாரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின்மேல் வைத்துக் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - என் காதலர் எப்போதும் என் உள்ளத்துள் மகிழ்ந்து வதிகின்றார் ; ஏதிலர் இகந்து உறைவர் என்னும் இவ்வூர் - இதனை யறியாது . அவர் அன்பிலரென்றும் , பிரிந்து வேறிடத்து வதிகின்றாரென்றும் , பழித்துரைக்கும் இவ்வூர் .
கலைஞர் உரை:
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.
சாலமன் பாப்பையா உரை:
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஏன் ஊரார் அவரை இப்படி நிந்திக்க வேண்டும்? அவர் என்னைத் துறந்துவிட்டா போய்விட்டார்?) எப்போதும் என் மனத்தில் மகிழ்ச்சியோடு தங்கியிருக்கும் என் காதலரை அவர் என்னைப் பிரிந்து போய்விட்டாரென்றும், என்மீது அன்பில்லாதவரென்றும் இந்த ஊரார் சொல்லுகிறார்களே! என்ன அறியாமை இவர்களுக்கு!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காதலர் எக்காதலத்திலும் என் உள்ளத்துள்ளே மனமகிழ்ந்து தங்கியிருக்கின்றார். அதனை அறியாமல் அவர் பிரிந்திருக்கின்றார் - அன்பில்லாதவர் - என்று இவ்வூர் சொல்லும்.
தமிழ்க்குழவி உரை:
என் உள்ளத்துள் எப்போதுமே இவர் இருக்கிறார். அதை அறிவாரோ இவ்வூர்மக்கள். என்னை அவர் பிரிந்து சென்று விட்டார் என்று கூறுகின்றனர்.
Translation
Rejoicing in my very soul he ever lies; 'Her love estranged is gone far off!' the village cries
Explanation
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.
Transliteration
Uvandhuraivar Ullaththul Endrum Ikandhuraivar Edhilar Ennum Iv Voor

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1130