Thirukural

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும். ('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.)
மணக்குடவர் உரை:
பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர். இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
( இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கண் தலைமகன் சொல்லியது . ) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலொடு தேன் கலந்தது அற்று - பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . பருகக் கூடிய பாலின் குறைந்த இனிமையும் , பருகக்கூடாத தேனின் நிறைந்த இனிமையும் கலந்தாற் பருகக் கூடிய சிறந்த இனிமை பெறப்படுதலின் அதை ' வாலெயிற்று நீர்க்கு ' உவமமாக்கினான். கலந்ததற்று என்பது கலந்தற்று எனத்தொக்கது . ஏகாரம் தேற்றம் , ' பணிமொழி ' அன்மொழித்தொகை . ' எயிறூறிய ' இடவேற்றுமைத் தொகை
கலைஞர் உரை:
இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதலன் சொல்வது;) நயமான சொற்களைப் பேசும் என் காதலியின் வெண்மையான பற்களிடையே ஊறி வந்த அவளுடைய வாயூறல் நீரை நான் உண்டது, பாலும் தேனும் கலந்துண்டது போல உணவும் ஊக்கமும் தந்ததே!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மெல்லிய சொல்லினையுடையாளது வெண்மையான பற்களில் ஊறிய நீர் பாலோடு தேனைக் கலந்து கலவை போன்றதாகும்.
தமிழ்க்குழவி உரை:
பணிவொடு மென்மையான மொழிகளைப் பேசும் என் காதலியின் முத்துப் போன்ற பற்களிடையே ஊறுகின்ற உமிழ்நீர் பாலொடு தேன் கலந்ததுபோல் இனியது.
Translation
The dew on her white teeth, whose voice is soft and low, Is as when milk and honey mingled flow.
Explanation
The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.
Transliteration
Paalotu Thenkalan Thatre Panimozhi Vaaleyiru Ooriya Neer

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1121