|
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது) கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா. (நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின் இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா. இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இதுவுமது கொடும்புருவம் கோடா மறைப்பின் - அருகிலுள்ள வளைந்த புருவங்கள் நேராக விருந்து மறைக்குமாயின்; இவள் கண் நடுங்க அஞர்செய்யல - இவள் கண்கள் நான் நடுங்குதற்கேதுவான துன்பத்தைச் செய்யமாட்டா. இயல்பாகக் கொடிய புருவங்கள் தம் நேர்மையில்லாத் தன்மையால், தமக்கருகிலுள்ள கண்கள் எனக்குக் கடுத்துன்பஞ் செய்வதைத் தடுக்காதுபோயின, என்பதுபடநின்றமையின், 'மன்' ஒழியிசைப்பொருளது 'புருவம்'; 'கண்' பால்பகாவஃறிணைப் பெயர்கள்.
|
|
கலைஞர் உரை:
|
|
புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(இதோ இவளுடைய) வளைந்த புருவங்கள் இன்னும் வளையும்படி கண்களைச் சுருக்கி என்னைப் பார்க்கிற இந்தப்பார்வை எனக்கு முன்போல் அச்சமும் துன்பமும் உண்டாக்கவில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கொடுமையான புருவங்கள் வளையாமல் செம்மையாயிருந்து விலக்குமானால் இப்பெண்ணின் கண் கள் நடுங்குவதற்குக் காரணமான துன்பத்தினைச் செய்யாதிருக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
புருவங்கள் வளையாதிருந்து மறைத்திருக்குமாயின் இவளின் கண் அம்புகள் பாய்ந்து எனக்குத் துன்பம் நேர்ந்திருக்குமா?
|
|
Translation
|
|
If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart Her eyes no more would dart.
|
|
Explanation
|
|
Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.
|
|
Transliteration
|
|
Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar
Seyyala Manival Kan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|