Thirukural

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர். (மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கயவர் அறையும் பறைபோல்வர்; தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான். இஃது அடக்கமில ரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் தம் காதாற்கேட்ட மருமச் செய்திகளைக் கொண்டுசென்று பிறர்க்கெல்லாஞ் சொல்லுதலால்; கயவர் அறை பறை அன்னர் - கீழ்மக்கள் விளம்பரஞ் செய்தற்குக் கொட்டப்படும் பேரிகையொப்பர். வெளிப்படிற் குற்றமாகுமென்று ஒருவன் மறைத்துச்சொன்ன செய்தி மறை. மறைக்கப்பட்டவர் ' பிறர் '. உய்த்தல் பொறையை ஏற்றிக் கடத்துதல். கீழ்மக்கட்கு மருமச் செய்திகளைப் பிறர்க்குச் சொல்லும்வரை அவற்றை உள்ளத்திற் கொண்டிருத்தல் ஒருபொறை (பாரம்) போலத் தோன்றுதலால், ' உய்த்து ' என்றார். 'பறையன்னர் ' என்றாரேனும், பறையறைந்து சொல்லுதலையே குறித்தலால் இது வினையுவமை. இக்குறளால் கயவர்க்கு மறையடக்க மின்மை கூறப்பட்டது.
கலைஞர் உரை:
மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தம் காதில் விழுகிற இரகசியங்களைப் பல இடங்களுக்கும் தாமே வலியச் சென்று சொல்லுகிற குணத்தால் கயவர்கள் பறை சாற்றும் தமுக்குக்குச் சமானமானவர்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கயவர் தாம் கேட்டறிந்த மறைபொருள் போகும் இடமெல்லாம் தாங்கிக் கொண்டுபோய் மற்றவர்களுக்குச் சொல்லுதலால், அக்கயவர் அடிக்கப்படுகின்ற பறையினை ஒப்பவராவர்.
தமிழ்க்குழவி உரை:
கயவர்கள், பிறர்தமக்கு மறைவாகச் சொன்ன செய்திகளை மற்றவர்களுக்கு வலியச்சென்று கூறி மகிழ்தலால் முழக்கும் பறைகளுக்கு ஒப்பாவர்.
Translation
The base are like the beaten drum; for, when they hear The sound the secret out in every neighbour's ear.
Explanation
The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.
Transliteration
Araiparai Annar Kayavardhaam Ketta Maraipirarkku Uyththuraikka Laan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1076