Thirukural

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கீழ் - கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - தன்னிற்சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும். (அகப்பட்டி: அகமாகிய பட்டி, பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார், 'நோதக்க செய்யும் சிறுபட்டி' (கலித்.குறிஞ்சி.15) என்றார் பிறரும்.)
மணக்குடவர் உரை:
மனையகத்திருந்து பொற்புடையராகிய பெண்டிரைக் காணின், அவரினும் மிகப் பொற்புடையாராய் அதனைப் பெற்றேமென்று இறுமாப்பர் கயவர். இது நிறையிலரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஞா. தேவநேயப் பாவாணர் கீழ் - கீழ்மகன்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - பட்டித்தன்மையில் தன்னினும் குறைந்தவரைக கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தில் அவரினும் மேம்பட்டுத் தன் மிகுதிகாட்டி யிறுமாந்து நிற்பான். அகப்பட்டி தனக்கு உட்பட்ட அல்லது உள்ளடங்கிய பட்டி. பட்டி யென்பது பட்டிமாடு. பட்டிமாடுபோற் கட்டுக் காவலின்றித் திரிபவனைப் பட்டி யென்றது உவமவாகுபெயர். " நோதக்க செய்யுஞ்சிறுபட்டி (கலித். 51). ' கீழ் ' பண்பாகுபெயர்."
கலைஞர் உரை:
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(சமுதாயத்தின் கட்டுத் திட்டங்களை மதிக்காமல் நடப்பதனால் கயவர் தேவர்களுக்குச் சமானம் என்று ஏளனமாகச் சொன்னதன்றி அவர்களுக்கும் தேவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. கயவருடைய இலக்கணம்) போக்கிரிகளைக் கண்டால் கயவர்கள் அவர்களுடன் சேர்ந்து அகந்தை மிகுந்த போக்கிரித்தனத்தில் அவர்களுக்கும் மிஞ்சினவர்களாகிக் களித்துக் கொம்மாளம் போடுவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
கீழ்மகன் தன்னில் கருங்கிய பட்டியாய் நடப்பவரைக் கண்டால் அப்படிப்பட்ட நடத்தையில் அவரைவிட மேம்பட்டு தன் மிகுதியினைக் காட்டி இறுமாப்படைவான்.
தமிழ்க்குழவி உரை:
கீழ் மக்களாகியக் கயவர், தம்மினும் தாழ்ந்தவராக எவரையும் காணின் இறுமாப்புக் கொண்டு அவரை இழிவாக நடத்துவர்.
Translation
When base men those behold of conduct vile, They straight surpass them, and exulting smile.
Explanation
The base feels proud when he sees persons whose acts meaner than his own.
Transliteration
Akappatti Aavaaraik Kaanin Avarin Mikappattuch Chemmaakkum Keezh

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1074