Thirukural

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு.

உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். (உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.)
மணக்குடவர் உரை:
கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும். ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.
தேவநேயப் பாவாணர் உரை:
கனவிலும் கரத்தல் தேற்றாதார் மாட்டு-தம்மிடத்துள்ள பொருளைக் கனவிலுங் கரத்தலறியாதவரிடத்து; இரத்தலும் ஈதலே போலும்-ஒன்றை யிரத்தலும் வறியார்க் கொன்றீதலே போலும்! இரந்த பொருள் இழிவுந் துன்பமுமின்றி வருதலாலும், ஈவோனுக்குப் புகழைக் கொடுத்தலாலும், ’இரத்தலும் ஈதலே போலும்’ என்றார். உம்மை யிரண்டனுள் முன்னது இழிவு சிறப்பு; பின்னது எச்சம். ஏகாரம் ஈற்றசை.
கலைஞர் உரை:
இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
வைத்துக்கொண்டே கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லுவதைக் கனவிலும் அறியாதவர்களிடத்தில், ஒருவன் சென்று தானம் கேட்பதை, (அவர்கள் அவன் தமக்குப் புண்ணியத்தைத் தானம்) கொடுக்க வந்ததாகவே வரவேற்பார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தம்மிடம் இருப்பதைக்கனவிலும் மறைத்தலை அறியாதாரிடம் சென்று ஒன்றனை யாசித்தல், வறியவர்கள் ஈதலே போன்றதாகும்.
தமிழ்க்குழவி உரை:
உள்ளதை மறைப்பதைக் கனவில் கூட நினையாதார். மாட்டு, இரந்து நிற்பதும் ஈதல் போல் பெருமை உடையதே.
Translation
Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dream.
Explanation
To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself).
Transliteration
Iraththalum Eedhale Polum Karaththal Kanavilum Thetraadhaar Maattu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1054