Thirukural

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதொன்றும் கண்பாடு அரிது.

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது. இஃது உறங்கவொட்டா தென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்-ஒருவன் மந்திர மருந்துகளால் நெருப்பினுள் கிடந்து உறங்குதலும் கூடும்; நிரப்பினுள் யாது ஒன்றும் கண்பாடு அரிது-ஆயின், வறுமையிலிருந்து கொண்டு எவ்வகையிலுங் கண்மூடித் தூங்கவே முடியாது. நெருப்பினும் வறுமை கொடிது என்றவாறு. இதுவும் அவன் துயரக் கூற்று. உம்மை யிரண்டனுள் முன்னது அருமை; பின்னது முற்று. இனி, ’யாதொன்றும்’ என்பது ஒரு சிறிதும் எனினுமாம். இவ்வும்மை இழிவு சிறப்பு. இத்தொண் (ஒன்பது) குறளாலும், வறுமையின் கொடுமை கூறப்பட்டது. ’நிரப்பு’ மேற் கூறியதே.
கலைஞர் உரை:
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.
சாலமன் பாப்பையா உரை:
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அவனுக்கு நிம்மதியே இருக்காது.) நெருப்பின் மத்தியில் இருந்துகொண்டுகூடத் தூங்கிவிடலாம்; ஆனால் தரித்திரத்தில் இருந்துகொண்டு துளிகூடத் தூங்க முடியாது,
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு நெருப்பின்மேல் படுத்துத்தூங்குதலும் முடியும்; வறுமை வந்துவிட்டபோது யாதொன்றினாலும் தூங்குதல் முடியாததாகும்.
தமிழ்க்குழவி உரை:
நெருப்பினும் கூடப் படுத்துத் துயிலலாம், ஆனால் வறுமை என்னும் துன்பம் நேர்ந்தால் கண்கள் கூட மூட இயலாது.
Translation
Amid the flames sleep may men's eyelids close, In poverty the eye knows no repose.
Explanation
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.
Transliteration
Neruppinul Thunjalum Aakum Nirappinul Yaadhondrum Kanpaatu Aridhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1049