|
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். ('இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.
|
|
மணக்குடவர் உரை:
|
|
நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இன்மை என வரு பாவி- வறுமையென்று சொல்லப்படுவ தொரு கொடியான்; இம்மையும் மறுமையும் இன்றி வரும் ஒருவனிடத்து வருங்கால் அவனுக்கு இம்மையின்பமும் மறுமையின்பமும் இல்லாவாறு வருவான். நுகராமையால் இம்மையின்பமும் ஈயாமையால் மறுமையின்பமும் இல்லையென்பதாம். இன்மை, மறுமை என்பன ஆகுபெயர். பாவம்(வ) செய்தவன் பாவி(வ); கரிசு(பாவம்), கரிசன்(பாவி)- ஆண்பால் , கரிசி(பாவி-பெண்பால்) என்பன தென்சொற்கள். கொடியவனையே இங்குப் 'பாவி' என்றார்' 'இன்றிவிடும்' என்பது மணக்குடவ பரிப்பெருமாளர் கொண்ட பாடம்; வறுமையைக் கொடியான் என்று ஓர் ஆளாக உருவகித்தது ஆட்படையணி.
|
|
கலைஞர் உரை:
|
|
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(வறுமை எப்படி வருகிறதென்றால்) ஒருவன் செய்த பாவமானது வறுமை என்ற பெயரோடு அவனுக்கு இப் பிறப்பின் இன்பங்களும் மறுபிறப்புக்கான எண்ணங்களும் இல்லாமற் போகும்படி அவனிடம் வந்து சேருகிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்கு வறுமையென்று சொல்லப்படுகின்ற பாவி வந்தபோது அவனுக்கு இம்மை மறுமை இன்பங்கள் இல்லாதவாறு வரும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வறுமை என்கிற பாவி ஒருவனைச் சேர்ந்து விடின் இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் கூட அவனுக்குத் தொடர்ந்து உடனிருக்கும்.
|
|
Translation
|
|
Malefactor matchless! poverty destroys
This world's and the next world's joys.
|
|
Explanation
|
|
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).
|
|
Transliteration
|
|
Inmai Enavoru Paavi Marumaiyum
Immaiyum Indri Varum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|