Thirukural

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும்.

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
குடி செய்வல் என்னும் ஒருவற்கு - என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும். (முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.)
மணக்குடவர் உரை:
குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.
தேவநேயப் பாவாணர் உரை:
குடிசெய்வல் என்னும் ஒருவற்கு-என் குடியை மேன்மேலுயர்த்தக் கடவேன் என்னும் பூட்கைகொண்டு, அதற்கேற்ற முயற்சியைச் செய்யும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்றுத் தான் முந்து உறும்-உதவி செய்யும் பொருட்டுத் தெய்வமும் தன் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு அவனுக்கு முன் வந்து நிற்கும். சொல்லுதல் செயலையுந் தழுவிற்று. தறுதல் இறுகவுடுத்தல். ஒன்றைத் தப்பாது செய்து முடிப்பதாக உள்ளத்திற் பூணுதல் பூட்கை. குடிசெய்தல் வினை இறைவனுக்கும் இசைந்ததென்பது கருத்து.
கலைஞர் உரை:
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.
சாலமன் பாப்பையா உரை:
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அந்த உறுதி இருந்தால்) குடித்தனத்தின் நிலைமையை உயர்த்துவேன் என்று உறுதிகொள்ளும் ஒருவனுக்குத் தெய்வம் தானாகவே வந்து கச்சை கட்டிக்கொண்டு உதவி செய்யும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
'என் குடியினை உயரச் செய்வேன்" என்று முயன்று செயல்புரியும் ஒருவனுக்குத் தெய்வம் ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு தான் முன் நின்று துணை செய்யும்.
தமிழ்க்குழவி உரை:
தன் குடியை மேம்படச்செய்வதற்காக உழைக்கிறேன் என முன்வருவார்க்கு தெய்வம் தானே வந்து உதவி செய்யும்.
Translation
'I'll make my race renowned,' if man shall say, With vest succinct the goddess leads the way.
Explanation
The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.
Transliteration
Kutiseyval Ennum Oruvarkuth Theyvam Matidhatruth Thaanmun Thurum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1023