Thirukural

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.

சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் - யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை - நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே. (இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். பிறப்பு என்றது அதற்கு உரிய உடம்பினை.)'
மணக்குடவர் உரை:
பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர், தாம் பிறந்த நிலத்துக்குப் பாரமாவர். இஃது இவர் பிறப்பதினும் பிறவாமை நன்றென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் - பிறரொடு போட்டியிட்டுப் பெரும்பொரு ளீட்டுவதையே பெருவிருப்பக் குறிக்கோளாகக் கொண்டு , அதன் பயனாகிய புகழை விரும்பாத ஆண் மக்களின் பிறப்பு; நிலக்குப் பொறை - இந்நிலவுலகிற்குச் சுமையாவதன்றி ஒரு பயனும் படுவதன்று. "உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன் றீவார்மே னிற்கும் புகழ்." (குறள் 232) "ஈத லிசைபட வாழ்த லதுவல்ல தூதியமில்லை யுயிர்க்கு." (குறள். 231) "வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு மெச்சம் பெறாஅ விடின். (குறள் 238) வசையிலா வண்பயன் குன்று மிசையிலா யாக்கை பொறுத்த நிலம்." (குறள் 239) என்று முன்னரே கூறியுள்ளமையால் , 'நிலக்குப் பொறை' என்று அதை இங்கு நினைவுறுத்தினார். வெளியூரும் வெளிநாடுஞ் சென்று பெரும்பொருளீட்டுவது வணிகருள் ஆண்மக்கள் செயலாதலின் 'ஆடவர்' என்றார். வினையே ஆடவர்க் குயிரே (குறுந்.135) முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை.(தொல்.980). 'தோற்றம்' என்றது தோன்றிய வுடம்பை.'நிலக்கு' அத்துச்சாரியை தொக்கது.
கலைஞர் உரை:
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அவன் பூமிக்குப் பாரம்.) பணத்தை சேர்த்து வைப்பதில் மட்டும் மிகுந்த ஆசையுள்ளவர்களாக அதை நல்ல காரியங்களுக்குச் செலவு செய்து புகழைத் தேடிக்கொள்ளாத மனிதர்கள் பிறப்பது பூமிக்குப் பாரம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பொருள் மிகுதியாகச் சேர்ப்பதையே விரும்பி அதன் பயனான புகழினை விரும்பாத மக்களது பிறப்பு இப்பூமிக்குப் பாரமேயாகும்.
தமிழ்க்குழவி உரை:
பொருள் சேர்த்து வைப்பதையே வாழ்வாகக் கருதி புகழை விரும்பாது வாழும் மக்கள் இந்த பூமிக்குப் பாரமே ஆவர்.
Translation
Who lust to heap up wealth, but glory hold not dear, It burthens earth when on the stage of being they appear.
Explanation
A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.
Transliteration
Eettam Ivari Isaiventaa Aatavar Thotram Nilakkup Porai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1003