Thirukural

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும்.

அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும். (பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார் சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்.
தேவநேயப் பாவாணர் உரை:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்- ஒருவனை அன்புபற்றி விரும்பாமற் பொருள் பற்றி விரும்பும் அழகிய வளையலணிந்த விலைமகளிர்; இன்சொல்- தாம் கருதிய பொருள் பெறுமட்டும் தாம் அன்பு கனிந்தவராகக் கூறும் இனிய சொல்; இழுக்குத் தரும்-அன்று இன்பந்தருவதுபோல் தோன்றினும் பின்பு துன்பத்தையே விளைவிக்கும். 'ஆய்தொடி' , 'இன்சொல்' என்பன ஆடவருள்ளத்தைக் கவரும் கருவிகளுள் இரண்டைக் குறித்தன.'பொருள்விழையும்' ஐந்தாம் வேற்றுமைத்தொகை.ஆய்தொடி ஆராய்ந்தெடுத்ததொடி; வினைத்தொகை.
கலைஞர் உரை:
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அன்பு காரணமாக ஆசை கொள்ளாமல், பணம் காரணமாக மட்டும் பாசாங்கு ஆசை காட்டும் விலைமாதர்களுடைய பேச்சு இனிமையாக இருந்தாலும், அதனால் துன்பமே வரும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனை அன்புபற்றி விரும்பாமல் பொருள் பற்றி விரும்புகிற மகளிருடைய இனிய சொற்கள் துன்பத் தினைக் கொடுக்கும்.
தமிழ்க்குழவி உரை:
அன்பின் காரணமாகவன்றி பொருளுக் காசைபட்டுவிரும்புகின்றப் பொதுமகளிரின் இனிய சொற்கள் ஒருவருக்குத் துன்பத்தைத் தரும்
Translation
Those that choice armlets wear who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin prove.
Explanation
The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.
Transliteration
Anpin Vizhaiyaar Porulvizhaiyum Aaidhotiyaar Insol Izhukkuth Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 911