Thirukural

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு.

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை-செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை; மடவார்கண் உண்டு-அது பேதையரிடத்திலேயே உள்ளது. செல்வத்தின் பயனை இழப்பித்து அதை வறுமையாக மாற்றுவதால், பேதமையை வறுமையாகச் சார்த்திக் கூறினார்.
கலைஞர் உரை:
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(விருந்தோம்பப் பணக்காரராக இருக்க வேண்டுமென்ப தில்லை. ஆனால் பணம் இருந்தும் விருந்தோம்பாவிட்டால்) விருந்தினரை உபசரிக்காதவர்கள் பணக்காரராக இருந்தாலும் அவர்கள் தரித்திரர்கள் தாம்; அவர்களுக்கு முட்டாள் தனந்தான் மிச்சம்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நல்ல விருந்தினரைப் பேணி அவ்வேள்விப் பயனை அடையாதவர்கள், பொருளைக் காப்பாற்றி இழந்து இதுபோது பற்றுக்கோடு இல்லையானோம், என்று இரக்கப்பட்டு வருந்துவர்.
தமிழ்க்குழவி உரை:
இருந்தும் இல்லாமை எனப்படுவது விருந்தோம்பல் என்னும் பண்பின் தலைப்படாத் தன்மையே. இந்நிலைமை அறிவில்லாதவர்களிடமே உண்டு.
Translation
To turn from guests is penury, though worldly goods abound; 'Tis senseless folly, only with the senseless found.
Explanation
That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.
Transliteration
Utaimaiyul Inmai Virundhompal Ompaa Matamai Matavaarkan Untu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 89