|
போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது முதன்மை குன்றுதல் இலர். இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உறின் உயிர் அஞ்சா மறவர்-போர்வரின் இறப்பிற்கஞ்சாது மகிழ்ந்து போர்க்களத்திற்குச் செல்லும் மறவர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்-தம் அரசன் அதுவேண்டாமென்று தடுப்பினும் தம் மறந்தளர்தல் இல்லை. நாள்தொறும் வருந்தியுழைக்கும் உழைப்பாளிகள் வேலைசெய்யாது சோம்பியிருத்தலை வெறுத்தல் போல, போருக்கேற்ற மறமும் உடல் திறமும் பயிற்சியும் பெற்ற மறவர் போரின்றியிருத்தலை வெறுத்தல் இயல்பே. இதை. "போரெனின் புகலும் புனைகழன் மறவர் காடிடைக் கிடந்த நாடுநனி சேய செல்வே மல்லே மென்னார்" (புறம். 31) "உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" (ஷெ 68) "மண்டமர் நசையொடு கண்படை பெறாஅது" (முல்லை: 67) என்பவற்றால் அறிக
|
|
கலைஞர் உரை:
|
|
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படிப்பட்டவர்கள்) அவசியமான சமயத்தில் உயிர் கொடுக்கவும் அஞ்சாத வீரர்கள் .அரசன் தமக்கு வருத்தம் உண்டாக்கி விட்டாலும் கடமையில் குறைந்து விடமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
போர் வந்தால் தமது உயிர்ப்பொருட்டு அஞ்சாமல் போர்மேல் செல்லும் வீரர், தமது தலைவ னாகிய இறைவன் (மன்னன்) 'அது வேண்டாம்' என்று *கோபித்தாலும் அவ்வீர மிகுதியில் குன்றமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
போர் வருங்கால் தன் உயிருக்கும் அஞ்சாமல் களம் புகும் வீரர்கள் அரசனே தடுக்க முற்படினும், தன் பெருமையில் குன்றார்.
|
|
Translation
|
|
Fearless they rush where'er 'the tide of battle rolls';
The king's reproof damps not the ardour of their eager souls.
|
|
Explanation
|
|
The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).
|
|
Transliteration
|
|
Urinuyir Anjaa Maravar Iraivan
Serinum Seerkundral Ilar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|