Thirukural

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள்.

ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை. (மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார், இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் - அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற்சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை. இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
பொருள் அல்லவரை-பிறரால் ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும்; பொருளாகச் செய்யும் பொருள் அல்லது-மதிக்கப்படச் செய்யும் செல்வத்தையல்லாமல்; பொருள் இல்லை-சிறந்த பொருளொன்று இவ்வுலகத்தில் இல்லை. மதிக்கப்படாதவர் கல்லாதார், இழிதொழிலார், உறுப்பறையர், ஒழுக்கமில்லார், நோயாளியர், இளஞ்சிறார் முதலியோர். மதிக்கப்படுவாராகச் செய்தலாவது கற்றோரும் அரசனுட்பட்ட அதிகாரிகளும் அவருதவியை நாடச்செய்தல். இழிவு சிறப்பும்மை தொக்கது. இதில் வந்துள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை. பொருட்பின்வருநிலை வரையறைப்பட்டது.
கலைஞர் உரை:
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கச் செய்கிற செல்வத்தைவிட மக்கள் தேடவேண்டிய பொருள் வேறொன்றும் இல்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிக்கப்படுபவராகச் செய்யவல்ல பொருள் அல்லாமல் வேறு ஒருவனுக்குப் பொருளாவதில்லை.
தமிழ்க்குழவி உரை:
ஒரு பொருளாக மதிக்கத் தகுதியில்லாதவரையும் மதிக்க தகுதியுடையவராகச் செய்வது பொருளே; அது தவிர வேறெதுவும் இல்லை.
Translation
Nothing exists save wealth, that can Change man of nought to worthy man.
Explanation
Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.
Transliteration
Porulal Lavaraip Porulaakach Cheyyum Porulalladhu Illai Porul

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 751